
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓட்டுப்பட்டி பிரிவு பகுதியில் சாலையின் குறுக்கே வேக தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கிறது. நேற்று மாலை அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு நோக்கி சென்ற வேன் டிரைவர் ஓட்டுப்பட்டி பிரிவில் வைத்து எதிரே வரும் வாகனத்திற்கு வழி விடுவதற்காக வாகனத்தை சற்று நிறுத்தினார். அப்போது பின்னால் வந்த 3 மினி லாரிகள் மற்றும் ஒரு கார் ஆகியவை வேன் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினர். அதன் பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.