நாடு முழுவதும் இன்று முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. கடந்த 10 மாதங்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல் இருந்த நிலையில் நேற்று மத்திய அரசு விலை உயர்த்தப்படும் என்று அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிகையில் கூறப்பட்டிருப்பதாவது, நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? “உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்” என்பது, sadist பாஜக  அரசுக்கு மிகவும் பொருந்தும்!

உலக அளவில் #CrudeOil விலை சரிந்துள்ள நிலையில், #Petrol #Diesel விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டார்களே!? வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு அமைந்திருக்கிறது. மக்களே… அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பா.ஜ.க.வின் வழக்கமாகிவிட்டது! இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது! ஒன்றிய பாஜக அரசே… தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக என்று பதிவிட்டுள்ளார்.