
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரம் அருகே அண்டாவில் இருந்த தண்ணீரில் மூழ்கி 1 1/2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கள்ளங்குழி பகுதியைச் சேர்ந்த லியோ பிரவீன் – நிம்மி தம்பதியருக்கு கெவின் ஸ்மித் என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக நிம்மி கணவரை பிரிந்து தன் அம்மா வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் வீட்டின் பின்பக்கம் விளையாடிக் கொண்டிருந்த கெவின் ஸ்மித்தை காணவில்லை என பாட்டி தேடிய போது அருகில் உள்ள அண்டாவில் மூழ்கிய நிலையில் குழந்தை கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருவட்டார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.