நாளை அந்தியூரில் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக நோட்டீஸ் கொடுக்க ஆதரவாளர்கள் வந்தார்கள் என்று செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு தடை விதித்த தடை நீக்கப்படுவதாக ஹைகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர். மேலும் சின்னம் ஒதுக்கீடு சட்டத்தின்படி தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்றும், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்தும் உத்தரவிடப்பட்டது. இதற்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஹைகோர்ட் கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. தற்போது அந்த தடையை நீக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிமுக விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று தீர்ப்பு வெளியாகி இருக்கும் இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தன்னுடைய ஆதரவாளர்களோடு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “கூட்டத்தினர் என்னுடைய வீட்டிற்கு வருவது வழக்கம். 100 முதல் 200 பேர் தினமும் ஒன்றாக தான் வருவார்கள். இன்றைக்கு கோபிசெட்டிபாளையம், நாளை அந்தியூரில் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக நோட்டீஸ் கொடுக்க வந்தார்கள்.  தினமும் நிர்வாகிகள் வருவார்கள் காபி சாப்பிடுவார்கள். அப்போது பேசியது (எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு விழா புறக்கணிப்பு)  அதோடு முடிந்தது ஆளை விடுங்க” என்று கூறியுள்ளார்.