உத்தரபிரதேச மாநிலத்தின் சம்பல் நகரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கலவரம் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. பழமையான ஷாஹி ஜமா மசூதியில் அதிகாரிகள் ஆய்வுக்காக நவம்பர் 24-ம் தேதி சென்றபோது, மக்களிடையே மோதல் ஏற்பட்டது.

இது விரைவில் கலவரமாக மாறியதில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அந்தப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் புதிய புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

இந்த புதிய புறக்காவல் நிலையம், 100 நாட்களில் விரைவாக கட்டப்பட்டது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கலவரக்காரர்கள் போலீசாரை தாக்க பயன்படுத்திய செங்கற்கள் இந்தக் கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இது கலவரத்தின் நினைவாகவும், அதனை எதிர்த்து பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது. காவல் கண்காணிப்பாளர் கிரிஷன் குமார் பிஷ்னோய் தெரிவித்ததாவது, “இது மாவட்டத்தின் முதல் உயர் தொழில்நுட்ப புறக்காவல் நிலையமாகும்.

நகரின் பாதுகாப்பை மேம்படுத்த இது மிகவும் அவசியமான கட்டடம்” என்றார். சம்பல் மாவட்ட ஆட்சியர் ராஜேந்தர் பென்சியா கூறியதாவது, “நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த புறக்காவல் நிலையம் அனைத்து மத மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதே நோக்கம்.

இதில் கண்காணிப்பு கோபுரம், பாதுகாப்பு சிசிடிவி கட்டுப்பாட்டு அறை போன்ற வசதிகள் உள்ளன” என்றார். இதேவேளை, காக்கு சராயில் உள்ள ஒரு பழமையான கோயில், 46 ஆண்டுகளுக்குப் பிறகு ராம நவமி தினத்தன்று மீண்டும் திறக்கப்பட்டதும் நகரத்தின் மற்றொரு முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.