உலகின் மிக விலை உயர்ந்த விமான நிலையங்களில் ஒன்றாக தற்போது துருக்கியின் இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையம் பெயர் பெற்றுள்ளது. ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களுக்கு இடைப்பட்ட முக்கியமான இடத்தில் அமைந்துள்ளதால், தினசரி 2.20 லட்சம் பயணிகளை கையாளும் இந்த ஏர்போர்ட்டில், ஒரு வாழைப்பழம் ரூ. 565-க்கு (5 யூரோ) விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், ஒரு பீர் ரூ. 1,697 (15 யூரோ), லாசக்னா 90 கிராம் ரூ. 2,376 (21 யூரோ) என்ற அளவுக்கு விலை உயர்வாக இருக்கிறது.

மெக்டொனால்ட்ஸ், பர்கர் கிங் போன்ற பிராண்டுகளும் பிற விமான நிலையங்களைவிட இங்கு அதிக விலைக்கு உணவுகளை விற்பனை செய்கிறதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். விமான மாற்ற நேரம் காரணமாக பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுவதால், அங்குள்ள உணவகங்களை தவிர வேறு விருப்பமின்றி பயணிகள் சாப்பிட வேண்டிய சூழல் உருவாகிறது. இதனைச் சுமையாக பயன்படுத்தும் உணவகங்கள், மிகைப்படுத்தப்பட்ட விலையில் உணவுகளை விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு “வாழைப்பழத்திற்கு ரூ. 565 என்றால் உணவுக்கு கட்டுப்பாடு இல்லையா?” என பயணிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.