தமிழகத்தில் மதிய உணவு திட்டம் என்பது 1962 ஆம் ஆண்டு பள்ளிகளில் தொடங்கப்பட்டு 1982 ஆம் ஆண்டு சத்துணவு திட்டமாக மேம்படுத்தப்பட்டது. இந்த சத்துணவு திட்டம் பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் பள்ளிக்கு செல்வதை உற்சாகப்படுத்தும் வகையில் இருந்தது.அதோடு இந்தத் திட்டத்தால் ஆரம்பக் கல்வி என்பது அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

இந்த சத்துணவு திட்டத்தில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான 20 லட்சத்து 74 ஆயிரத்து 39 மாணவர்களும், நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 21 லட்சத்து 97 ஆயிரத்து 914 மாணவர்களும் பயன்பெற்று வருகிறார்கள். இதைத் தொடர்ந்து இந்த திட்டத்தில் 43,131 சத்துணவு மையங்கள் மூலம் 5 வகையான கலவை சாதங்கள் மற்றும் மசாலா முட்டைகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் சத்துணவு மையங்களில் முட்டையை உரிப்பதற்கு பணியாளர்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே இந்த சிரமத்தை குறைப்பதற்காக முட்டை உரிக்கும் நவீன எந்திரம் கொண்டு வருவதற்கு சமூக நலன் துறை முடிவு செய்துள்ளது.

இதற்காக சமூக நலத்துறை அதிகாரிகள் கூறும்போது தமிழகத்தில் 451 பள்ளி சத்துணவு மையங்களில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பதால் அனுதினமும் 500 முட்டைகளை வேக வைத்து உரிக்கும் போது முட்டைகள் வீணாகிறது. அதோடு சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது.

எனவே முட்டை உரிக்கும் நவீன எந்திரம் வாங்க தமிழக அரசிடம் நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி கேட்டுள்ளதாக கூறியது. மேலும் இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வந்தால் சத்துணவு பணியாளர்கள் மிகவும் பயனடைவார்கள் என்று சமூக நலன் துறை அதிகாரிகள் கூறினார்கள்.