தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்பதால் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து அறிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், சேலம், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும் மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.