கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தனியாருக்கு சொந்தமான கிரானைட் கல்குவாரி ஒன்று உள்ளது. கடந்த பத்து வருடங்களாக செயலில் இல்லாதாத இந்தக் குவாரியில் பாறை வெட்டப்பட்ட இடத்தில் தண்ணீர் தேங்கி குட்டை உள்ளது.

அங்கு நேற்று இரவு ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பெயரில் விரைந்து வந்த போலீசார்  இறந்தவரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

இறந்த நபர் 40 முதல் 45 வயது உடையவராக இருக்கலாம் என போலீசார் கூறினர். மேலும் இறந்தவரின் உடலை சுற்றி கயிறு கட்டி இருந்ததால் வேறு எங்கேயோ வைத்து கொலை செய்துவிட்டு உடலில் கல்லை கட்டி குவாரியில் வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.