
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவந்த ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம், முதலீட்டாளர்களிடம் முதலீடாக பெற்ற ரூபாய்.2,438 கோடியை மோசடி செய்ததாக பொளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர் உட்பட 13 பேரை கைது செய்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், இதில் தொடர்புடைய நபர்களின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி உள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி ஆசையம்மாள், ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரையிலும் ரூ.6.35 கோடி பணம், ரூ.1.13 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் 22 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இவ்வழக்கில் தொடர்புடையதாக சொல்லப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் துபாயில் உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் இவ்வழக்கில் கைதான இடைத்தரகர் ரூசோ அளித்த வாக்குமூலத்தின் படி, ஆர்.கே.சுரேஷ் பற்றி அனைத்து விமான நிலையங்களுக்கும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.