தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு என்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற இடத்தில் நடைபெறுகிறது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் புதிய அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் கட்சிக்கொடியினை அறிமுகப்படுத்தினார். அவருடைய கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்த கட்சியாக பதிவு செய்துள்ளது. அதன் பிறகு இன்று நடைபெறும் முதல் மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். காலை முதலே தொண்டர்கள் வர ஆரம்பித்த நிலையில் நடிகர் விஜய்யும் நேற்று இரவே மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்றுவிட்டார். பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ச்சிகள் தொடங்கிய நிலையில் ‌ பறை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

நடிகர் விஜய் முதலில் மாநாட்டுக்கு  நுழைந்த நிலையில் கொடி ஏற்றிய பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடிவிட்டு உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்பது குறித்து அதிரடியாக அறிவித்து வருகிறார்கள். குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுக்கு ஒத்துழைக்காமல் செயல்படுவதால் ஆளுநர் பதவி தேவையா என்று கேள்வி எழுப்பிய அவர்கள், தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்தால் ஆளுநர் பதவியை நீக்க உடனடியாக வலியுறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்கனவே தமிழகத்தில் ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்தால் ஆளுநர் பதவியே இருக்காது என்று கூறியுள்ளது பேசும் பொருளாக மாறி உள்ளது.