
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள கஜூரி கிராமத்தில் நடைபெற்ற பயங்கர சம்பவம் ஒரே குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த கிராமத்தில் 7ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன், தன்னுடைய தாத்தாவுக்குச் சொந்தமான துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, பக்கத்து வீட்டுக்குச் சென்றுள்ளான்.
அங்கு முகமது கைஃப் என்ற இளைஞர் ஒருவர் தனியாக தொலைக்காட்சியில் ஐபிஎல் போட்டியை பார்த்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில், சிறுவன் துப்பாக்கியை முகமது கைஃப் நோக்கி நீட்டிய நிலையில், தவறுதலாக டிரிகரில் விரல் பட்டதால், துப்பாக்கி வெடித்து கைஃப்பின் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
இந்த திடீர் தாக்குதலில் முகமது கைஃப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துப்பாக்கி சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது, இளைஞர் உயிரிழந்த நிலையில் கிடந்தார் மற்றும் சிறுவன் மயங்கியிருந்தான்.
சம்பவ தகவல் கிடைத்தவுடன் போலீசார் வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், மயக்கம் தெளிந்த சிறுவனை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.