
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அப்போது ஆளுநர் தமிழ் தாய் வாழ்த்து முடிந்த பிறகு சட்டசபையை விட்டு வெளியேறினார். தமிழக அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறிய நிலையில் கடந்த முறையும் தமிழக அரசு எழுதிக் கொடுத்த உரைக்கு பதிலாக வேறொரு உரையை அவர் வாசித்தார். இந்த முறை தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதால் ஆளுநர் அவையை விட்டு வெளியேறியதாக ஆளுநர் மாளிகை குற்றம் சாட்டு தெரிவித்துள்ளது. ஆனால் இதனை திமுகவினர் மறுத்துள்ளனர்.
இந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது வாசிக்கப்பட்ட உரையைத் தவிர வேறு எதுவும் ஒளிபரப்பப்படக்கூடாது என்று சபாநாயகர் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநருக்கு தமிழக அரசுக்கும் கண்டனம் தெரிவித்து விஜய் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது.
இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும். ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும். எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.