
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தற்போது சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் தொகுதி மறு வரையறை கூட்டுக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உட்பட ஏழு மாநிலங்களில் இருந்து நிர்வாகிகள் என மொத்தம் 24 பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசும்போது இந்த நாள் வரலாற்றில் பொறிக்கப்படும். ஜனநாயகத்தை காப்பதற்காக நாம் அனைவரும் ஒரு அணியில் திரண்டுள்ளோம். இந்திய கூட்டாட்சியை காக்கும் வரலாற்றின் மிக முக்கியமான நாள் இது. தொகுதி மறு சீரமைப்பை ஏற்க முடியாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறோம். இது எண்ணிக்கை பற்றியது கிடையாது அதிகாரம் பற்றியது. மக்கள் தொகை அடிப்படையில் ஆன தொகுதி மறு சீரமைப்பு என்பது தமிழ்நாடு போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கும்.
மக்கள் தொகையை பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மூலம் கட்டுப்படுத்திய நம் மாநிலங்கள் அதன் மூலமாகவே நாடாளுமன்ற தொகுதியை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இன்று கூட்டப்பட்டுள்ள குழுவுக்கு நியாயமான தொகுதி மறு சீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கை குழு என்ற பெயரிடப்பட வேண்டும். அரசியல் மற்றும் சட்ட வல்லுனர்களை வரையறுப்பதற்கான வல்லுனர் குழு அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.