கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சுதா. இந்த தம்பதியினருக்கு கௌதம் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் கண்ணன் தனது மனைவி மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் இருசக்கர வாகனத்தை கரும்பு லோடு ஏற்றி சென்ற டிராக்டர் முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்தின் மீது டிராக்டர் உரசியது.

இதனால் நிலைதடுமாறி கண்ணன், சுதா,கௌதம் ஆகிய மூன்று பேரும் கீழே விழுந்தனர். இதனால் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சுதாவும், கௌதமும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுதா மற்றும் கௌதம் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.