செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் நேற்று சென்னை சென்று திரும்பும் போது பனையூர் சுங்கச்சாவடி அருகே பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது சென்னையிலிருந்து சிதம்பரம் செல்லக்கூடிய அரசு பேருந்து ஒன்று ஈசிஆர் சாலை வழியாக வந்தது. அந்த பேருந்து நடத்துனரிடம் கல்பாக்கம் செல்ல வேண்டும் என அந்த பெண் கேட்டபோது, கல்பாக்கத்தில் பேருந்து நிற்காது என நடத்துனர் கறாராக கூறிவிட்டு சென்றார்.

இதனையடுத்து பின்னால் வந்த மற்றொரு அரசு பேருந்தில் அந்த பெண் ஏறினார். கல்பாக்கம் வந்து இறங்கிய போது பனையூரில் தன்னை ஏற்றாமல் வந்த அரசு பேருந்து கல்பாக்கம் வந்து நின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சம்பந்தப்பட்ட நடத்துனர் மற்றும் பேருந்து ஓட்டுனரிடம் இந்த பேருந்து கல்பாக்கத்தில் நிற்காது என்று கூறிவிட்டு இப்போது மட்டும் எப்படி இங்கு நிற்கிறது எனக் கேட்டார். உடனே அந்த நடத்துனரும், ஓட்டுநரும் தகாத வார்த்தைகளால் அந்த பெண்ணை திட்டி பேசி, பின் பேருந்தின் உள்ளே நின்று கொண்டே அடிக்க கை ஓங்கினார்கள்.

இதனை பேருந்தில் பயணித்த மற்ற பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் கல்பாக்கம் முக்கிய நகரமாக விளங்கி வருவதால் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.