
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டியை அடுத்த அனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்குமார். அவரது மகன் பரத்(8) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. அவரது மகன் தேவனேஷ். நேற்று பரத்தும், தேவனேஷும் வீட்டின் அருகே உள்ள ஏரி பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்றனர். நீண்ட நேரம் ஆகியும் சிறுவர்கள் வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோர்கள் இரு வரையும் தேடி சென்றனர். ஆனால் சிறுவர்கள் கிடைக்கவில்லை. ஏரிக்கரையில் இருவரது காலணிகளும் கிடந்தது.
இதனால் ஏரியில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு இரண்டு சிறுவர்களின் உடல்களை மீட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு சிறுவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.