சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவை சேர்ந்த பெயிண்டரான சரவணன் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் பெயிண்டராக வேலை செய்து வருகின்றார். இவருடைய மனைவியை விஜயசாந்தி வண்ணாரப்பேட்டை சிமெண்டரி சாலையில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை பார்த்து வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் சரவணன் வெளிநாட்டில் இருந்தபோது சம்பளத்தை மணலி புதுநகர் பகுதியில் உள்ள தன்னுடைய தங்கையின் கணவரான மற்றொரு சரவணன் என்பவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இவர் மெக்கானிக் வேலை செய்து வரும் நிலையில் அந்த பணத்தை விஜயசாந்தி வீட்டில் கொடுக்க அடிக்கடி சென்று வந்ததால் இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய பெயிண்டர் சரவணன் மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் அறிந்து அதிர்ச்சி அடைந்து அவரை கண்டித்ததோடு அடித்து உதைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் மெக்கானிக் சரவணனும் கள்ளக்காதலை தொடரும்படி விஜயசாந்தியை வற்புறுத்தியுள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த விஜயசாந்தி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் கடிதம் ஒன்று சிக்கியது. அதில், என் சாவுக்கு என் கணவர் சரவணன் மற்றும் என்னுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட உறவினரான சரவணன் ஆகியோர்கள் தான் காரணம் என்று எழுதப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.