ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படாத காரணத்தினால் இடைத்தேர்தலில் கழகம் போட்டி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படாத காரணத்தினால் இடைத்தேர்தலில் கழகம் போட்டி இல்லை. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு களத்தில் பரப்புரை பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் ஒதுக்கப்பட்ட பிரஷர் குக்கர் சின்னத்தை இடைத்தேர்தல் காலங்களில் ஒதுக்கிட முடியாது என தலைமை தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கழகத்தின் சார்பில் 27.01.2023 மற்றும் 31/1/2023 ஆகிய தேதிகளில் அளிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் இன்று பதில் அளித்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பொதுத்தேர்தல் காலங்களில் குக்கர் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம் தற்போது இடைத்தேர்தல் காலங்களில் அவ்வாறு ஒதுக்கீடு செய்ய இயலாது என தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற பொதுத் தேர்தல் ஓராண்டு காலத்திற்குள் வரவிருக்கும் சூழலில் புதியதோர் சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்த கூடும். ஆகவே வரவிருக்கிற பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற பொது தேர்தல்களில் நமது வெற்றி சின்னமான குக்கர் சின்னத்தோடு தேர்தல்களை சந்திப்போம். இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதே சரியாக இருக்கும் என்ற தலைமை கழக நிர்வாகிகளின் ஆலோசனையை கருத்தில் கொண்டு நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர் இளங்கோவன் அதிமுக சார்பில் தென்னரசு,   நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சிவப்பிரசாந்த் உட்பட 70க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த சூழலில் அமமுக விளக்கியுள்ளது. இன்றோடு வேட்புமனு தாக்கல்  நிறைவடைந்துள்ளது. வேட்புமனு பரிசீலனை நாளை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து வேட்புமனுக்களை திரும்பப்பெற பிப்ரவரி 10ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.