சென்னை மாவட்டம் நந்தனம் எஸ்.எம் நகரைச் சேர்ந்தவர் பாபு. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். பாபு தேனாம்பேட்டையில் உள்ள அலங்கார கண்ணாடி விளக்குகள் விற்பனை செய்யும் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

நேற்று இரவு பாபு டீ குடித்துவிட்டு பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அதிவேகமாக வந்த ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து பாபு மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் கார் மோதியதால் பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்த ரித்தேஷ், விக்ரம், தருண் ஆகிய மூன்று பேரும் காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாபுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கார் டிரைவரான அகமது என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.