
தஞ்சாவூர் மாவட்டம் கஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா(32). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்பவராக வேலை பார்க்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி வசூலுக்கு சென்ற சிவா மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிவாவை தேடி வந்தனர். இந்த நிலையில் ஆயுதக்களம் கிராமத்தில் செங்கால் ஓடையில் பாதி உடல் எரிந்த நிலையில் ஒரு நபரின் சடலம் கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி நேற்று போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது உயிரிழந்து கிடந்த நபரின் கையில் மோதிரம் இருந்தது. அதை வைத்து அது சிவா தான் என்பதை உறுதி செய்தனர். பின்னர் சிவாவின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பணம் வசூல் செய்ய சென்ற சிவாவை ஓடைப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்து உடலை எரித்தது தெரியவந்தது. இந்த வழக்கில் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.