
மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் பல ஆண்டுகளாக கணபதி என்பவர் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். நேற்று 6 பேர் ஹோட்டலுக்கு வந்தனர் அவர்கள் பரோட்டா கேட்டதும் கணபதி பரோட்டா தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
ஆனால் அவர்கள் உடனடியாக பரோட்டா வேண்டும் என கணபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த நபர்கள் தாங்கள் மறைத்து கொண்டு வந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கணபதியை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனால் படுகாயமடைந்த கணபதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.