
சென்னை மாவட்டம் மதுரவாயில் பகுதியயைச் சேர்ந்தவர் நடராஜன். அவரது மகன் கௌதம்(31),மருமகள் மஞ்சு(28). இவர்களுக்கு எழிலரசி என்ற ஒன்பது மாத பெண் குழந்தை உள்ளது. அனைவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். கடந்த 8-ம் தேதி நடராஜன் தனது மின்சார இருசக்கர வாகனத்திற்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து வீடு முழுவதும் பரவ ஆரம்பித்தது. இதனை பார்த்ததும் வீட்டிற்குள் இருந்த கௌவுதம், மஞ்சுவும் தங்களது 9 மாத குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
இருப்பினும் மூன்று பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அக்கம்பக்கதினர் மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் கடந்த 10-ம் தேதி குழந்தை எழிலரசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த நிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கௌதமும் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.