ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்த விவசாயியான துரைசாமி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இவருடைய மனைவி பாப்பாத்தி. இவர்களுடைய மகன் பழனிச்சாமி என்பவருக்கு திருமணம் ஆகி சாவித்திரி என்ற மனைவியும் 18 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 15 ஆண்டுகளாக பழனிச்சாமியும் சாவித்திரியும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். பழனிச்சாமிக்கு குடிப்பழக்கம் இருப்பதால் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தன்னுடைய தாயிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். சமீபத்தில் தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் விவசாய நிலத்தை பாப்பாத்தியும் பழனிச்சாமியும் விற்றதாக கூறப்படுகிறது. அதற்கு முன்பணமாக ஒரு லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை பழனிச்சாமி தனது தாய் பாப்பாத்தியிடம் விவசாய நிலம் விற்ற மீதி பணத்தை வாங்கித் தரும்படி கேட்ட நிலையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதால் பழனிச்சாமி ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தன்னுடைய தாயை சரமாரியாக வெட்டினார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பழனிச்சாமியை கைது செய்தனர். பெற்ற மகனே தாயை கொலை செய்த சம்பவம் ஈரோட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.