
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தென்முடியனூர் கிராமத்தில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாசு (55), புருஷோத்தமன் (53) என்ற மகன்கள் இருக்கிறார்கள். இதில் பாலு ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை மகன்கள் இருவரும் பிரித்துக் கொண்டு விவசாயம் செய்து வந்துள்ளனர். இதுபோக பாலுவின் பெயரில் 50 சென்ட் இடமும் இருந்துள்ளது. இதனை தம்பிக்கு பிரித்துக் கொடுக்காமல் அண்ணன் மட்டும் பயிர் செய்து வந்துள்ளார். அண்ணன் வாசுவிடம் பலமுறை புருஷோத்தமன் நிலத்தை பிரித்துக் கொடுக்குமாறு கேட்ட நிலையில் அவர் மறுத்துவிட்டார்.
இந்நிலையில் சம்பவ நாளில் வாசு வயல்வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது புருஷோத்தமன் அங்கு சென்று தகராறு செய்துள்ளார். அதாவது எனக்கு தராமல் நீ மட்டுமே நிலத்தை அனுபவிப்பாயா என்று தன் அண்ணனிடம் அவர் கேட்டுள்ளார். அப்போது கோபத்தில் அருகே கிடந்த மண்வெட்டியை எடுத்து வாசு தன் தம்பியின் தலையில் அடித்தார். இதில் புருஷோத்தமன் மயங்கி விழுந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக கூறிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வாசுவை கைது செய்துள்ளனர்.