தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே மகேந்திரன் சுதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பொன்மாறன் என்ற 4 வயது மகனும் 2 மகள்களும் இருக்கும் நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக சுதா உடல் நலக் குறைவினால் இறந்துவிட்டார். இந்நிலையில் பொன்மாறனுக்கு கழுத்தில் கட்டி இருந்ததால் சங்கரன்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனையில் மகேந்திரன் சிகிச்சை வழங்கி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த 10-ம் தேதி சிறுவன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கழுத்தில் சிடி ஸ்கேன் எடுக்க முடிவு செய்தனர்.

அதற்கு முன்பு சிறுவனுக்கு அலர்ஜி இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காக ஊசி போட்டுள்ளனர். அந்த ஊசியை செலுத்திய பிறகு சிறுவனின் உடல்நிலை மோசமாகி உயிரிழந்து விட்டான். அந்த சிறுவனுக்கு  மருத்துவருக்கு பதிலாக லேப் டெக்னீசியன் ஊசி போட்டதால்தான் இறந்து விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில் இந்த சம்பவத்திற்கு தற்போது பாஜக அண்ணாமலை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர் இல்லாத நிலையில், அங்கிருந்த உதவியாளர் ஒருவர் ஊசி போட்டதால், தென்காசியைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்திருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் அதிகரித்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, போதிய மருத்துவர்கள் இல்லாததால் ஏற்பட்டுள்ளன. நான்கு ஆண்டுகளாக, மருத்துவர்களை நியமிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர்? மருத்துவர்கள் நியமனம் எதனால் தாமதமாகிறது? எத்தனை சிறு குழந்தைகளைத் தொடர்ந்து பறி கொடுத்து வருகிறோம்?

இதோ, அதோ என்று, நான்கு ஆண்டுகளில் தமிழக மருத்துவத் துறையை நாசமாக்கிவிட்டு, கொஞ்சம் கூட மனசாட்சி இன்றிப் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கக் கூச்சமாக இல்லையா அமைச்சருக்கு? இத்தனை கையாலாகாத அமைச்சரை, மிக முக்கியமான சுகாதாரத் துறையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்கு, தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் தொடர் உயிரிழப்புகள் தெரியுமா தெரியாதா? திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்தினருக்கு, திமுக கட்சியிலிருந்து உதவி செய்யப் போவதாகக் கூறியிருப்பது, திமுக அரசின் தோல்வியை மூடி மறைக்கவா? திமுக கொடுக்கும் பணம், குழந்தையின் உயிருக்கு ஈடாகிவிடுமா? தமிழக அரசு ஏன் பொறுப்பேற்கவில்லை? அரசு சார்பில் ஏன் இழப்பீடு அறிவிக்கவில்லை? இந்தக் கையாலாகாத திமுக அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்?