
கடலூர் மாவட்டம் அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் ஆகாஷ்(16) வேப்பூரில் இருந்து விருதாச்சலத்தில் உள்ள தட்டச்சு பயிற்சி பள்ளிக்கு தனது நண்பரான ஷஜின்(16) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில் கண்டப்பன்குறிச்சி தனியார் பள்ளி அருகே சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ஷஜினை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆகாஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.