
ஈரோடு மாவட்டம் மரப்பாலத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். கடந்த 2 ஆண்டுகளாக விக்னேஸ்வரன் சுபஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேஸ்வரன் நண்பர்கள் முன்னிலையில் காதலியை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த சுபஸ்ரீயின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேற்று நள்ளிரவு நேரம் சுபஸ்ரீயின் பெற்றோர் மகளை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு மிரட்டியுள்ளனர். மேலும் அனுப்பவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
உடனே காதல் தம்பதியினர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். காவல் நிலையத்தில் வைத்து விக்னேஸ்வரன் மீது பெண் வீட்டார் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.