சென்னை மாவட்டம் அயனாவரம் கார்டன் தெருவில் குமார்(71) என்பவர் வசித்து வந்தார். இவர் தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிகள் பொது ஊழியர்கள் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளராக இருக்கிறார். கடந்த 16-ஆம் தேதி குமார் தாம்பரத்தில் இருக்கும் மகள் வீட்டிற்கு புறப்பட்டார். ஆனால் மறுநாள் வரை வீட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து அவரது மருமகன் மோகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 3 பேர் குமாரை காரில் அழைத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

அதாவது தொழிற்சங்க பொதுச் செயலாளர் குமாருக்கும், ரவி என்பவருக்கும் இடையே ரியல் எஸ்டேட் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 16-ஆம் தேதி ரவி குமாரை காரில் அழைத்து சென்று பேசிள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் குமாரின் கழுத்தை நெரித்து கொலை செய்து மேல் ஓலக்கூர் பசுமலை அருகே ஒரு பள்ளத்தில் அவரது உடலை புதைத்தது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரவி, அவருக்கு உடந்தையாக இருந்த செந்தில் குமார், விஜய் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.