
தேனி மாவட்டத்தில் உள்ள போடி அருகே ஒரு அரசு பொறியியல் கல்லூரி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு நெல்லையைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அந்தக் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் விக்னேஷ் திடீரென கல்லூரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் மாணவன் இறந்து கிடந்த கழிவறையில் அதிக அளவில் ரத்தம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது பற்றி மாணவனின் தாயார் காவல்துறையினரிடம் கேட் நிலையில் அவர்கள் எறும்பு கடித்ததால் அதிகளவு ரத்தம் வெளியேறி மாணவன் இறந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு தற்போது எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் மாணவனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
திருநெல்வேலியில் கல்லூரி பயிலும் விக்னேஷ் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து அவரது தாயார் காவல்துறையில் முறையிட்டு கழிவறையில் இருந்த அதிக அளவு இரத்தம் குறித்து கேட்க, “எறும்பு கடித்ததால் வந்திருக்கலாம்” என்று பொறுப்பற்ற முறையில் ஸ்டாலின் மாடல் திமுக அரசின் காவல்துறை தெரிவித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் காவல்துறை விசாரணை என்பதே விந்தையானதாக மாறிவிட்டது.
இசிஆர் வழக்கில் டோல் கேட்டில் விலக்கு பெற திமுக கொடி கட்டிய குற்றவாளி; இப்போது, எறும்பு கடித்து இவ்வளவு இரத்தம் சிந்தி, மர்மமாக உயிரிழந்த மாணவன் என இவர்கள் விசாரணை எல்லாம் சினிமாவில் வைத்தால் கூட யாரும் நம்ப முடியாத அளவில் தான் இருக்கிறது. பட்டியலினத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரியான மாணவன் விக்னேஷின் மரணத்தின் உண்மையான காரணத்தை மறைத்து திசைதிருப்ப ஸ்டாலின் மாடல் திமுக அரசு முயற்சிக்குமாயின், அது கடும் கண்டனத்திற்குரியது. மாணவன் விக்னேஷின் மரணத்திற்கான காரணத்தை முறையாக விசாரணை செய்து கண்டறிந்து, அதில் யாருக்கேனும் தொடர்பிருப்பின், கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.