
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஓக்கூர் அண்ணா நகரில் சன்னா பாபு-திவ்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதுடைய தனஸ்ரீ என்ற மகள் உள்ளார். கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி விஷப்பாம்பு தனஸ்ரீயை கடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தனஸ்ரீயை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தைகள் நல அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் விஷம் நரம்பு மண்டலத்தை பாதித்ததால் குழந்தை சுயநினைவை இழந்தது. மேலும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளித்து 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். தற்போது தீவிர சிகிச்சைக்கு பிறகு தனஸ்ரீ முழுமையாக குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார். இந்த நிலையில் தங்களது மகளின் உயிரை காப்பாற்றிய மருத்துவ குழுவினருக்கு சன்னா பாபுவும், திவ்யாவும் நன்றி தெரிவித்தனர். கடந்த 14-ஆம் தேதி தனஸ்ரீக்கு பிறந்தநாள். இதனால் மருத்துவமனையிலேயே கேக் வெட்டி தனஸ்ரீயின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.