திருச்சி மாவட்டம் தீரன் நகர் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதம் (26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்த நிலையில் அதிகமாக அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் தான் வேலை பார்க்கும் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த 21ஆம் தேதி கௌதமுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி கௌதம் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சோமரசம்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கௌதம் கல்லூரி படிக்கும் போது ஒரு பெண்ணை காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. ஆனால் காதலில் தோல்வி ஏற்பட்டதால் இந்த மன வேதனையில் இருந்துள்ளார். மேலும் இதனால் பூச்சி மருந்தை குடித்து அவர் வீட்டில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என்பதை விசாரணையில் தெரியவந்துள்ளது.