
உத்தரப்பிரதேச மாநிலம், சாந்தகபீர்நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய 24 வயது நர்ஸ் மம்தா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
களிலாபாத் காவல் எல்லைக்குட்பட்ட டேமா ரஹ்மத் பகுதியில் செயல்பட்டுவரும் சன்ஸ் ஹாஸ்பிட்டல் அண்ட் டிராமா சென்டரில் நடந்தது. நர்ஸின் கழுத்தில் மூன்று இடங்களில் தீவிர கீறல் காயங்கள் காணப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனையில் அவரது கழுத்தில் மூன்று எலும்புகள் முறிந்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நர்ஸின் குடும்பத்தின் புகாரின் அடிப்படையில், மருத்துவமனை இயக்குனர் ராம்ஜி ராவ் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளின் உத்தரவின்பேரில் மருத்துவமனை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. விசாரணைக்காக மருத்துவமனையில் இருந்த சிசிடிவி பதிவுகளும், DVR சாதனமும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மம்தாவின் தாயார் தெரிவித்ததாவது, அவரது மகள் திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு அழைத்துப் பேசும்போது, “இன்று மருத்துவமனையில் தங்குவேன், நாளை காலை வீட்டுக்கு வருகிறேன்” என கூறியிருந்தார்.
ஆனால் செவ்வாய்க்கிழமை காலை வரை அவர் வெளியே வராததை கவனித்த மருத்துவமனை ஊழியர்கள், அறை கதவை திறந்தபோது அவர் மயங்கிய நிலையில் காணப்பட்டார். துரிதமாக அவர் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு, போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
மருத்துவமனை இயக்குனர் ராம்ஜி ராவ் தனது பதிலில், “நர்ஸுக்கு கடந்த ஐந்து மாதங்களாக சிறுநீரகத்தில் கற்கள் இருந்ததால் சிகிச்சை நடைபெற்று வந்தது. அந்த இரவு அவர் காயம் காரணமாக மருந்தும், ஊசியும் செலுத்தப்பட்டது” என விளக்கம் அளித்துள்ளார்.
இருப்பினும், நர்ஸின் கழுத்து எலும்புகள் முறிந்திருந்தது மற்றும் அவரது அறைக்கதவுகள் திறந்திருந்தது, சிசிடிவி காட்சிகளில் சந்தேகத்துக்கு இடமளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவால் பஞ்சாயத்து நடத்தப்பட்டு, முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.