சென்னை மாவட்டம் அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனி சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் தினேஷ் பாபு பேட்மிண்டன் பயிற்சியாளராகவும், கட்டிட காண்ட்ராக்டராகவும் தொழில் செய்து வந்தார். நேற்று மாலை 4 மணிக்கு தினேஷ் பாபு தனது வீட்டில் இருந்து பேட்மிண்டன் பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 4 மர்ம நபர்கள் தினேஷ் பாபுவை வழிமறித்து அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.

இதனால் ரத்த வெள்ளத்தில் தினேஷ் பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தினேஷ் பாபுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.