
சென்னை மாவட்டம் மதுரவாயல் பாக்கியலட்சுமி நகரைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் கௌதம் இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்க்கிறார். நேற்று இரவு நடராஜன் தனது எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளுக்கு கீழ்தளத்தில் சார்ஜ் போட்டுவிட்டு முதல் தளத்திற்கு சென்று தூங்கிவிட்டார். இதனையடுத்து அதிகாலை நேரம் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளில் இருந்து கரும்புகை கிளம்பியது.
இதனால் கௌதம் அவசர அவசரமாக கீழே இறங்கி வந்தார். இதனை பார்த்த கௌதமின் மனைவி மஞ்சு தனது 9 மாத கைக்குழந்தை எழிலரசியை தூக்கிக்கொண்டு ஓடி வந்தார். இதனையடுத்து கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீயைஅணைக்க முயற்சி செய்தனர்.
ஆனால் தீ வேகமாக பரவி கௌதம், மஞ்சு, எழிலரசி ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.