திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேங்கிக்காலை பகுதியில் பூர்ணிமா (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த 18ஆம் தேதி ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பெரியவர்கள் முன்னிலையில் லட்சுமி காந்தன் என்பவர் என்னை 2-ம் திருமணம் செய்து கொண்டார். அவர் என்னிடம் சினிமா டைரக்டர் என்று கூறியதோடு நான் சில படங்களை தயாரித்துள்ளதாக கூறி திருமணத்திற்கு பிறகு சென்னைக்கு அழைத்துச் சென்றார். நாங்கள் அங்கு இருக்கும்போது என் கணவர் அடிக்கடி இரவு நேரத்தில் பல பெண்களுடன் செல்போனில் பேசுவார். நான் அதைப் பற்றி கேட்டால் அவர் என்னை அடித்து திட்டுவார்.

நாங்கள் 5 வருடங்கள் சென்னையில் ஒன்றாக இருந்த நிலையில் திருவண்ணாமலையில் வீடு வாங்குவோம் என கூறி என்னை கணவர் அழைத்து வந்தார். பின்னர் என் பெற்றோர் வீட்டில் என்னை விட்டுவிட்டு அவர் மட்டும் சென்னைக்கு சென்று விட்டார். அவர் என்னை அடிக்கடி வந்து பார்த்து செல்லும் நிலையில் அவர் வேறொரு பெண்ணுடன் பேசுவது தெரியவந்தது. அது பற்றி நான் விசாரித்த போது அவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியது தெரியவந்தது. அவர் சினிமா இயக்குனர் என்று கூறி இதுவரை 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது‌. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார். மேலும் அந்த உத்தரவின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லட்சுமி காந்தன் மற்றும் பூர்ணிமா ஆகியோரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.