
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மனைவி பிருந்தா(40). இவர்களுக்கு அருண்குமார்(18), அன்புக்கரசன்(15) என்ற இரு மகன்களும் ஐஸ்வர்யா(10) என்ற ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியினர் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டதால் பிருந்தா தனது மகள் ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இரண்டு மகன்களும் ஸ்டாலின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலின் உமாமகேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் ஸ்டாலின் திடீரென உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இவர் இறந்த பிறகு உமாமகேஸ்வரி தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று விட்டார். ஸ்டாலின் இறந்ததை அறிந்த பிருந்தா மகன்களுடன் வாழ முடிவு செய்தார். அதனால் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பிருந்தா மகள் ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு ஆடுதுறையில் உள்ள வீட்டிற்கு வந்தார்.
அப்போது அங்கு அவரது மூத்த மகன் அருண்குமார் மட்டுமே இருந்தார். அங்கு பிருந்தாவை பார்த்து அருண்குமார் சிறுவயதில் ஏன் எங்களை விட்டு சென்றீர்கள்? இப்போது ஏன் வந்தீர்கள்? என கேட்டுள்ளார்.அதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபமடைந்த அருண்குமார் வீட்டில் இருந்த கடப்பாறையை எடுத்து பிருந்தாவின் தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த பிருந்தா மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி விரைந்து வந்த போலீசார் இறந்த பிருந்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்த அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.