
கோவை மாவட்டத்தில் கள்ளக்காதலில் பிறந்த ஒரு வயது குழந்தையை தாய், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை காரமடை பகுதியைச் சேர்ந்த அனிதா (28) என்பவருக்கு ஒரு வயது ஆண் குழந்தை இருந்தது. சில நாட்களுக்கு முன்பு குழந்தை மாயமாகிவிட்டதாக கூறி, துடியலூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, குழந்தை கடத்தப்படவில்லை என்பதும், அந்தக் குழந்தையை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டதாகவும் தகவல் கிடைத்தது.
இந்த சம்பவத்தில் அனிதாவின் கள்ளக்காதலன் மோகன்ராஜ் (29) தொடர்புடையவன் என்பதும், தாய் அனிதாவும் இதைத் திட்டமிட்டே செய்திருப்பதும் போலீசாரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. குழந்தை கன்னியாகுமரியில் உள்ள ஒரு தம்பதிக்கு ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் உடனடியாக கன்னியாகுமரிக்கு சென்று குழந்தையை மீட்டு கோவைக்கு அழைத்து வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் அனிதா, அவரது கள்ளக்காதலன் பெரம்பலூர் கீழ்பிள்ளையனூரைச் சேர்ந்த மோகன்ராஜ், கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதா (ஆர்த்தி), சிங்காநல்லூரைச் சேர்ந்த சுஜாதா, புகழம்மாள், சேலத்திலிருந்து லில்லி, வாழப்பாடி அருகே உள்ள கருமாபுரத்தைச் சேர்ந்த ஷோபா ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் தகாத உறவின் மூலம் பிறந்த குழந்தை என்று தெரிந்தால் அவமானம் என்பதால் அதனை விற்பதற்கு அனிதா மற்றும் அவருடைய கள்ளக்காதலன் முடிவு செய்த நிலையில் திட்டமிட்டபடி 2 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். ஆனால் குழந்தையை விற்பது தொடர்பாக அனிதா மற்றும் அவருடைய கள்ளக்காதலன் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால்தான் கோபத்தில் அனிதா காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததோடு அவரே கன்னியாகுமரியில் குழந்தை இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக போலீசாருக்கு தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.