சென்னை மாவட்டத்தில் உள்ள சோலையம்மன் நகர் 2-வது தெருவில் மணிவண்ணன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். இவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் விஷ்ணு(10) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் தந்தை, மகன் இருவரும் புழல் ஏரியில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது இருவரும் எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தந்தை மகனின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு நேரம் என்பதால் உடலை தேடும் பணி கைவிடப்பட்டது. நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தந்தை, மகன்களின் உடல்களை மீட்டனர். பின்னர் அவர்களது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.