
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் முதல் முறையாக தேர்தல் வாக்குகள் பற்றி அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காக 8 முறை தமிழகத்திற்கு வந்தார். அதேபோன்று மத்திய அமைச்சர்கள் பலரும் தமிழகத்தில் பிரச்சாரம் செய்தார்கள். அதன்பிறகு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் பிரச்சாரம் செய்தார்கள்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் நடைபயணம் மேற்கொண்டதோடு பொதுக் கூட்டங்கள் நடத்தியும் தமிழகத்தில் பிரச்சாரம் செய்தார். ஆனால் அதிமுக சார்பில் நான் மட்டுமே தனி ஒருவனாக தமிழகம் முழுவது பிரச்சாரம் செய்தேன். கூட்டணியில் இருக்கும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உட்பட கூட்டணி தலைவர்கள் அந்தந்த தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் நான் ஒருவனாக அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்காக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தேன். அதன் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற வாக்குகளை விட தற்போது ஒரு சதவீதம் அதிகமான வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது. மேலும் இதையே நான் எங்களுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.