தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 14-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு 15-ஆம் தேதி வேளாண் பட்ஜெட், 17-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 2 பட்ஜெட் மீதான விவாதம் அமைச்சர்களின் பதில் உரை இடம் பெற்றது. கடந்த 24-ஆம் தேதி முதல் துணை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

இன்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு சட்டசபைக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாளை மகாவீர் ஜெயந்தி அரசு விடுமுறை நாள். நாளை மறுநாள் 11-ஆம் தேதி சட்டசபைக்கு மட்டும் விடுமுறை. 12 மற்றும் 13-ஆம் தேதிகள் சனி, ஞாயிற்றுக்கிழமை. 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் தினம் என்பதால் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வருகிற 15-ஆம் தேதி சட்டசபை மீண்டும் கூடும். அன்று செய்தி மற்றும் விளம்பரம் எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி, மனிதவள மேலாண்மை துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.