
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் இல்லாத விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். அதில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் இல்லாத நிலையில் அங்கிருந்த உதவியாளர் ஒருவர் ஊசி போட்டதால் தென்காசியை சேர்ந்த 4 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் ஏராளமானவை. இதில் பெரும்பாலான மரணங்கள் போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் தான் நிகழ்ந்தது.
நான்கு ஆண்டுகளாக மருத்துவர்கள் நியமிக்காமல் சுகாதாரத்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார். எத்தனை சிறு குழந்தைகளை தொடர்ந்து பறிகொடுத்து வருகின்றோம். இதோ அதோ என்று நான்கு ஆண்டுகளில் தமிழக மருத்துவத்துறையை நாசமாக்கி விட்டு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க அமைச்சருக்கு கூச்சமாக இல்லையா? இத்தனை கையாலாகாத அமைச்சரை மிக முக்கியமான சுகாதாரத் துறையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக அரசு மருத்துவமனையில் ஏற்படும் தொடர் உயிரிழப்புகள் குறித்து தெரியுமா தெரியாதா. இந்த கையாலாகாத திமுக அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காக செயல்பட இன்னும் எத்தனை உயிர்களை பறி கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார்.