தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகம் முழுவதும் 2600-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சுமார் 12,800 விவசாயிகளிடமிருந்து 60 ஆயிரம் டன் வரையிலான நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. சில நெல் கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளுக்கு கையூட்டு வாங்குவதாக புகார்கள் வருகிறது.

அதனை தடுக்க முகபொருள் வாணிப கழகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அந்த வகையில் புகார் அளிக்க விரும்பும் விவசாயிகள் சென்னை தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 18005993540 என்ற எண்ணுடன் இயங்கி வரும் உழவர் உதவி மைய இலவச தொலைபேசியில் நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். அந்த புகாரின் அடிப்படையில் நேரடியாக சென்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். புகார்களின் உண்மை தன்மையை கண்டறிந்து உடனுக்குடன் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்.

நிரந்தர பணியாளர்களை பொறுத்தவரை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை விதியின் படி மேல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். விவசாயிகள் யாருக்கும் கையூட்டு கொடுக்க வேண்டியது இல்லை. புகார்கள் இருக்கும் பட்சத்தில் மேற்குறிப்பிட்ட எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமாகவோ, நேரில் தொடர்பு கொண்டோ புகார் அளிக்கலாம். மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குனருக்கு 9445257000 என்ற எண்ணில் வாட்ஸ்அப் செய்தியாக மட்டும் புகார் அளிக்கலாம். புகார்களுக்கு ஆதாரமாக ஆவணங்களோ, காணொளியோ இருந்தால் அதையும் பதிவிடலாம் என செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.