
சென்னை அம்பேத்கர் நகர் பகுதியில் குப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமமாலினி (24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் எம்.காம் முடித்த நிலையில் ஆசிரியர் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய அண்ணன் வெங்கடேசனுடன் (28) பைக்கில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் திருமணம் முடிந்த பிறகு அண்ணா நகரில் வேலை பார்க்கும் தன்னுடைய தாயை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இவர்கள் நூறடி சாலை சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது சாலையில் உள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கி இருந்தது. இதில் பைக் ஏறி இறங்கிய நிலையில் திடீரென நிலை தடுமாறிய அண்ணன் தங்கை இருவரும் கீழே விழுந்தனர். இதில் வெங்கடேசன் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் ஹேமமாலினி சாலையில் விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரி அவரின் வயிற்றில் ஏறி இறங்கியது. அதோடு அவரை சிறிது தூரம் வரை இழுத்து சென்றது. இந்த கோர விபத்தில் ஹேமமாலினி ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் தன் கண்முன்னே தங்கை துடிதுடித்து பலியானதை பார்த்து வெங்கடேசன் கதறி துடித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.