திருவள்ளூர் மாவட்டம் செல்லாத்தூர் கிராமத்தில் விஜயன் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவ வீரராக வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடைய அக்கா மகளான மோகனா (28) என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் 10 வயதில் ஆதி மற்றும் அனிருத் என்ற இரட்டை குழந்தைகள் இருக்கிறது. இதில் விஜயன் தன்னுடைய அண்ணன் குடும்பத்துடன் ஒன்றாக வசித்து வந்த நிலையில் திடீர் தகராறில் விஜயனின் மனைவி குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி தனி குடித்தனம் சென்றுள்ளார். இது அசாமில் வேலை பார்த்து வந்த அவருடைய கணவருக்கு தெரிய வந்த நிலையில் அவர் ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜயன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தன் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரத்தில் கத்தியால் தன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் மதுபோதையில் அங்கேயே படுத்து தூங்கினார். இந்நிலையில் நேற்று காலை மோகனா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி ஆர்கே பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மோகனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விஜயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.