தமிழகத்தில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து விட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் செய்திகள் நாளுக்கு நாள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் பழவந்தாங்கல் ரயில்வே நிலையத்தில் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை மாநகர காவல் நிலையத்தில் 25 வயது மதிக்கத்தக்க பெண் போலீஸ் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் பணி முடிந்த பிறகு எழும்பூரில் இருந்து பழவந்தாங்கலுக்கு மின்சார ரயிலில் சென்றார். இவர் நடைமேடையில் இறங்கி தன்னுடைய வீட்டுக்கு இருள் சூழ்ந்த பாதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு மர்ம நபர் பின் தொடர்ந்துள்ளார்.

இதனால் அந்தப் பெண் போலீஸ் அங்கிருந்து பயந்து போய் வேகமாக நகர ஆரம்பிக்க அந்த நபர் அவரை பின்பக்கமாக வாயை பொத்தி கீழே தள்ளி விட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அந்த நபரின் கையைப் பிடித்து அந்தப் பெண் கடித்த நிலையில் கத்தி கூச்சலிட அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அந்த நபரை சரமாரியாக அடித்த பொதுமக்கள் அவரை குண்டுகட்டாக தூக்கி சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் சத்யபாலு என்பதும் மது போதையில் இருந்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவத்திற்கு தற்போது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது. அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. ஒட்டு மொத்த அரசு இயந்திரமே செயலிழந்து கிடக்கிறது. சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கிறார்.

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி வெளிவருகிறது. அரசுத் தரப்பில் இருந்தும், காவல்துறை தரப்பில் இருந்தும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்தப் பகுதியிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, ஒவ்வொரு குடும்பத்தையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. திமுக அரசும், காவல்துறையும் செயல்படாமல் இருப்பதைத் தொடர்ந்தால், பொதுமக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இது சமூகத்தை எங்கு கொண்டு செல்லும் என்பதை உணர்ந்திருக்கிறாரா முதலமைச்சர் அவர்களே என்று பதிவிட்டுள்ளார்.