தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று புத்தாண்டு தினத்தில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லவில்லை என்ற விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள x பதிவில், ஒட்டுமொத்த உலகமும் தமிழர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தமிழ் மொழியின் காவலன் நான் என வீராப்பு காட்டும் ஐயா திரு ஸ்டாலின் அவர்கள் நண்பகல் கடந்தும் நமது மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறாமல் அவர்களை புறக்கணித்து வருகிறார்.

மேலும் இந்த ஆண்டும் தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனத்தின் ஆவின் பால் பாக்கெட்டுகளில் புத்தாண்டுகள் வாழ்த்துக்கள் பதிவிடப்படவில்லை. ஆங்கில புத்தாண்டுக்கு அகிலமெல்லாம் வாழ்த்து மடல் எழுதும் முதல்வருக்கு ஆண்டாண்டு காலமாக தமிழர்களின் கலாச்சார கொண்டாட்டமான தமிழ் புத்தாண்டு வாழ்த்தை கூற மனம் இல்லையா.? தமிழுக்காக உயிரைக் கொடுக்கும் கழகம் திமுக என விளம்பர வசனம் பேசிக்கொண்டு நமது தாய் தமிழை வெறும் அரசியல் மொழியாக மட்டுமே திமுக பயன்படுத்துகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும். மேலும் தொடர்ந்து தமிழர்களின் மதகலாச்சார நம்பிக்கைகளின் மீது சேற்றை  வாரி இறைக்கும் திமுகவிற்கு வாக்குச்சாவடிகளில் சவுக்கடி கிடைக்கப் போவது நிச்சயம் என்று பதிவிட்டுள்ளார்.