சேலத்தில் திமுகவினரின் பெயரை பயன்படுத்தி கள்ளச்சாராயம் விற்பனை நடப்பதாகவும் திமுக என்றால் இரண்டு கொம்பு முளைத்தவர்களா? என்றும் எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வருவதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மரக்காணம் மரணங்களில் இருந்தோ அல்லது நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களில் இருந்தோ இந்த ஸ்டாலின் மாடல் அரசு ஒரு பாடம் கூட  கற்கவில்லையா? போலீசுக்கு பணம் கொடுத்து தான் இருக்கிறோம் என்று கள்ளச்சாராயம் விற்பவன் தைரியமாக சொல்லும் அளவிற்கு கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயமாக்கி நடத்தி உள்ளதற்கு ஸ்டாலின் அரசு வெட்கப்பட வேண்டும்.

போதாக்குறைக்கு திமுக கட்சிக்காரர் என்று அடையாளம் வேற. திமுக என்றால் இரண்டு கொம்பு முளைத்தவர்களா? அவர்கள் எந்த தவறும் செய்தாலும் காவல்துறை கண்டு கொள்ளாதா? தமிழ்நாடு முழுக்க கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.