
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு மத்திய அரசால் பாதுகாப்பு வழங்கப்படும். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் Y பிரிவில் CRPF வீரர்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் இந்த பாதுகாப்பு தமிழ்நாட்டிற்குள் மட்டும் தான் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியது ஏன் என்பது குறித்து தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது போன்று தான் தற்போது விஜய்க்கும் வழங்கப்பட்டுள்ளது. விஜயால் ஆளுநர் மாளிகைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்ட நிலையில் பரந்தூருக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவரால் மக்களை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டதால் தான் ஒய்பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு இதுவரை விஜய்க்கு பாதுகாப்பு வழங்காதது ஏன் என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.