
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் பகுதியில் திமுக சார்பில் இளைஞர் அணி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட விருந்தில் மது வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் கூறப்பட்டிருப்பதாவது,
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் சுவடுகள் நம்மை விட்டு கொஞ்சமும் நீங்கவில்லை. அதற்குள், அதே மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியத்தில் திமுக இளைஞரணி கூட்டத்தில் “பீர்” மதுபானம் பரிமாறப்பட்டதற்கு, “போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம்” என்று விளம்பர வீடியோ வெளியிட்ட திரு. ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்?
அதுவும், ரிஷிவந்தியம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஏற்பாட்டில் தான் பீர் வழங்கப்பட்டதாகவே செய்திகள் வருகின்றன. “திமுக MLA-வுக்கும், திமுகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என்று சொல்லப் போகிறாரா திரு. ஸ்டாலின்? தன் கட்சியின் அயலக அணி மாவட்ட பொறுப்பாளராக இருந்த ஜாபர் சாதிக், சர்வதேச Drug Mafia தலைவனாக செயல்பட்டு வந்தது பற்றியே இன்று வரை இந்த பொம்மை முதல்வர் ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லையே ?
திமுக-விற்கும் போதைப்பொருட்களுக்குமான தொடர்பையே விளக்க முடியாத இவரா, போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பார்? வாய்ப்பே இல்லை! திரு. ஸ்டாலின் அவர்களே- போதையின் பாதையில் தி.மு.க. யாரையும் கூட்டிச் செல்ல வேண்டாம்! போதைப்பொருள் புழக்கம் ஒழிய, இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி முடிவுக்கு வந்து, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் அதிமுகவின் -ன் நல்லாட்சி அமைவதே ஒரே வழி என்று பதிவிடப்பட்டுள்ளது.